அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காதவர் சசிகலா புஷ்பா.
தூத்துக்குடி மாவட்டம் முதலூர் அடையல் என்ற கிராமத்தில் சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்தவர் சசிகலா புஷ்பா. டீச்சர் ட்ரெயினிங் முடித்துவிட்டு வேலைக்குக் காத்திருந்தார். வேலை கிடைப்பதற்கு முன்னரே, நெல்லை மாவட்டம் உவரி கிராமத்தை சேர்ந்த லிங்கேஸ்வர திலகன் என்பவருடன் 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.
அரசியல் ஈடுபாடு காரணமாக அ.தி.மு.க.வில் நுழைந்து அதேவேகத்தில் மணல் மனிதரின் ஒத்துழைப்பு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் நட்பு காரணமாக அடுத்தடுத்த பதவிகளைப் பெற்று உச்சத்திற்கு சென்றார். ஒரு பெண் என்ற வகையில் மிகக்குறுகிய காலத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயராவதும், கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராவதும் எல்லோருக்கும் கிடைக்கிற வாய்ப்பு இல்லை. அதில் சசிகலா புஷ்பா சாதித்தார்.
அ.தி.மு.க. எம்.பி.யாக இருந்தும் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக அவர் பேசிய ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலானபோது, முதன்முதலில் அவருடைய குரலும், சில பரபரப்பான படங்களும் வைரலானபோது அவருடைய முகமும் அறிமுகமானது. ஆனால், இந்த வில்லங்கங்களுக்கு விளக்கம் கொடுக்க ஜெயலலிதாவைச் சந்தித்துவிட்டு, மாநிலங்களவையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கண்ணீருடன் பேசியபோது, இந்தியாவே திரும்பிப் பார்த்தது.
"நான் நினைத்தால் தமிழக அரசியலையே தலைகீழாக புரட்டிப்போட முடியும்'’என்று தில்லாகப் பேட்டி கொடுத்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும், அ.தி.மு.க. எம்.பி.யாகவே தொடரும் சசிகலா புஷ்பா தற்போது தினகரன் அணியில் இணைந்திருக்கிறார்.
இந்நிலையில்தான், அவருடைய விவாகரத்தும் இரண்டாவது திருமணமும் புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சசிகலா புஷ்பாவுக்காக அ.தி.மு.க. தலைமைக்கழக வாயிலில் ரத்தம் சொட்டச் சொட்ட அடிவாங்கியவர் அவருடைய கணவர் திலகன். அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற சசிகலா புஷ்பா தனது சட்ட ஆலோசகர் ராமசாமி என்பவரை இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக அழைப்பிதழ் வெளியானது.
இந்நிலையில், ராமசாமியின் மனைவி என்று கூறி, சத்தியப்பிரியா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு போயிருந்த என்னை ஒதுக்கிவிட்டு திருமணம் செய்யப்போகிறார் என் கணவர். இந்தத் திருமணத்தை தடைசெய்ய வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். மனுவை ஏற்ற நீதிமன்றம் சசிகலா புஷ்பாவின் இரண்டாவது திருமணத்துக்கு தடைவிதித்தது. ஆனால், தடையை மீறி சசிகலா புஷ்பாவும், ராமசாமியும் டெல்லியில் இந்துமத சடங்குகளுடன் திருமணம் செய்துகொண்டனர்.
"நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில் சசிகலா புஷ்பாவை திருமணம் செய்திருக்கிறீர்களே, இது செல்லுமா?' என்று ராமசாமியிடம் கேட்டபோது...…
""ஒரு கார் விபத்தில் எனது முதல் மனைவியும் மகனும் இறந்துவிட்டனர். நானும் எனது மகளும் மட்டும் தப்பினோம். எனது மகளுக்காகவே சத்தியப்பிரியாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன். ஆனால் அந்த சத்தியப்பிரியா, தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியிருப்பதை என்னிடம் மறைத்துவிட்டார். அவரது பராமரிப்பில் இருந்த எனது மகளை துன்புறுத்தினார். சத்தியப்பிரியாவின் தம்பி, எனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். எனது மகளின் பாதுகாப்புக்காகவே சசிகலா புஷ்பாவை திருமணம் செய்தேன். சத்தியப்பிரியாவின் முதல் கணவர் திண்டுக்கல் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். சத்தியப்பிரியா தனக்கே சொந்தம் என்று அவர் உரிமை பெற்றிருக்கிறார். அந்த உத்தரவைக் காட்டித்தான் இந்தத் திருமணத்தை செய்திருக்கிறேன். இதில் சட்டமீறலோ, சட்டச் சிக்கலோ இல்லை''’என்கிறார் ராமசாமி.
புதிய திருமணம் குறித்து சசிகலா புஷ்பா என்ன சொல்கிறார் என்று அறிய விரும்பினோம்...
""தமிழக அரசு எனக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்குகளில் ராமசாமி உதவியாக இருந்தார். சத்தியப்பிரியா கைக்குழந்தையுடன் அழுதபடி பேட்டி கொடுத்தது எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. ராமசாமிக்குப் பிறந்த அந்தக் குழந்தையை நானே வளர்க்க விரும்புகிறேன். அதை வாங்கித்தரும்படி ராமசாமியிடம் கேட்டிருக்கிறேன். இதற்குமேல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது''’என்றார்.
அடுத்த எபிசோட் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது இந்த அதிரடி கல்யாணம்.